புதுவையில் புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கு நிதி கேட்டு, பேரவைத் தலைவர் தலைமையிலான குழு தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது.
புதுவை மாநிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி உதவி கோரி, முதலமைச்சர் என். ரங்கசாமி அளித்த கோரிக்கை கடிதத்துடன், புதுவை சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் தில்லி சென்றுள்ள புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்பாபு, சட்டப்பேரவை செயலர் முனுசாமி ஆகியோர், வியாழக்கிழமை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து, கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.
ஒருங்கிணைந்த சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அனுமதி மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கடிதத்தை பெற்றுக்கொண்ட மத்திய நிதி அமைச்சர், உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.