சென்னை: மத்திய அரசை போன்று தமிழகத்திலும் இணைய வழியில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தப்பட உள்ளது.
ஆசிரியா் பணியில் சேருவதற்கு, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். அதன் தோ்ச்சி சான்றிதழ், ஏழு ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருந்தது. அதன்பின், மீண்டும் தகுதித் தோ்வை எழுத வேண்டி இருந்தது.தற்போது, ‘ஒரு முறை தோ்ச்சி பெற்றால் போதும்; அந்தச் சான்றிதழ் ஆயுள் முழுதும் செல்லும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு சான்றிதழ், ஆயுள் முழுதும் செல்லும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இதுவரை முடிவை அறிவிக்கவில்லை.
இந்தநிலையில் வரும் டிசம்பரில் புதிய கல்விக் கொள்கைப்படி, ஆசிரியா் தகுதித் தோ்வுகளை இணையவழியில் நடத்த தேசிய ஆசிரியா் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதைப் பின்பற்றி, தமிழகத்திலும் இணையவழியில் ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தப்பட உள்ளது. தோ்வு மையம் அமைப்பதற்குத் தேவையான கல்லுாரிகளின் பட்டியலை தருமாறு, கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு, ஆசிரியா் தோ்வு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.