அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்டனர்.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றறதும் முதலை உண்ட பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்டெடுத்த தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் நிறைவாக 2008 ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் இரா. கண்ணன், செயற் பொறியாளர் ஜமுனா தேவி, இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் வெங்கடேஷ், உதவி கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கோயிலில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவிநாசி ஆகாசராயர் கோயில், சுந்தரமூர்த்தி நாயானார் கோயில் உள்ளிட்ட கோயில்கள் கும்பாபிஷேக திருப்பணிகளும் விரைவில் துவங்குவதற்கான ஆயத்தப்பணிகளும் நடைபெற்று வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.