சேலத்தில் அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.9) முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் கடந்த இரு தினங்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் ஆகியவை நாளை முதல் வருகிற 23 ஆம் தேதி வரை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும், ஞாயிற்றுக்கிழமை கடைகள் செயல்பட அனுமதி இல்லை.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தின் முக்கிய கால்நடைச் சந்தைகளான கொங்கணாபுரம் வாரச் சந்தை, வீரகனூர் வாரச் சந்தை மற்றும் மேட்டூர் அணை பூங்கா ஆகியவற்றை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத்தலமான ஏற்காட்டுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.