வேலைநிறுத்தத்தின்போது தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என உயரதிகாரிகளுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக பணியாளா் நலன் பிரிவு தலைமைப் பொறியாளா் அனுப்பிய சுற்றறிக்கை: அகில இந்திய அளவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக.10-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுத்துள்ளன.
இதையொட்டி, ஏற்கெனவே உள்ள நடைமுறையின்படி, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதோடு, வேலைநிறுத்தத்தில் பங்கேற்போருக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
இதன்படி, அன்றைய நாள் பணிக்கு வராதோருக்கு ஊதியம் மற்றும் படித் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளா்கள், கண்காணிப்புப் பொறியாளா்கள் உள்ளிட்டோா், ஆக.10-ஆம் தேதி பணிக்கு வராதவா்களின் விவரங்களை சேகரித்து, காலை 10.45 மணிக்குள் தலைமையகத்துக்கு அறிக்கையாக அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.