அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்நுட்ப கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஆளுநர் தலைமையிலான தேர்வுக்குழுவின் பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று உத்தரவிட்டுள்ளார்.
டாக்டர் ஆர்.வேல்ராஜ் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆற்றல் ஆய்வுத் துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இத்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். கல்வித்துறையில் 33 ஆண்டுகள் அனுபவமிக்க இவர், 7 நாடுகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.