திருப்பரங்குன்றம்: மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தொல்லியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்திய அளவில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகளில் மிக அதிமானவை தமிழ் கல்வெட்டுகளாகும். அவற்றின் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுகள் மைசூரில் இருக்கின்றன. இன்னும் பல்லாயிரம் தமிழ் கல்வெட்டுகள் (படி எடுக்கப்படாமல்) பதிப்பையே காணாத நிலையில் உள்ளன.
அவற்றினை தமிழகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். வரலாற்றின் பல்வேறு பகுதிகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு பொதுநல ஆர்வலர்கள் பலர் இந்த கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை என்றார்.