தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி கரோனா கால சிறப்பு கடன் உதவி உள்பட ரூ. 20,000 கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குக்கிராம அளவில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 2021-22- ஆம் ஆண்டில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக ரூ. 1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூா் பணிகளை மக்கள் இணைந்து மேற்கொள்ளும் வகையில் ‘நமக்கு நாமே’ திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு 2021-22-ஆம் ஆண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடி கடன்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் 2021-22 ஆம் ஆண்டில் இத்திட்டம் ரூ.809.79 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி கரோனா கால சிறப்பு கடன் உதவி உள்பட ரூ. 20,000 கோடி கடன் வழங்க உறுதி செய்யப்படும். தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் சீரமைக்கப்பட்டு 2021-22-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.