திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற 75 ஆவது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள், மற்றும் 1 கோடியே 92 இலட்சத்து 61 ஆயிரத்து 863 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு சமாதானப் பறவையை பறக்க விட்டார்.
சிறப்பாக பணிபுரிந்தமைக்காக காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட 566 அரசு அலுவலர்களுக்கும் பாராட்டுச்சான்றிதழ்களையும் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டம் ஆகிய துறையின் மூலம் 204 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 92 இலட்சத்து 61 ஆயிரத்து 863 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.