திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 500 பேருக்கு மேல் சேவை செய்யும் நோக்கத்தில் பிளாஸ்மாவை சேமித்து வைக்கும் வகையில் நவீன ரத்த வங்கி குளிர்சாதன பெட்டி தனியார் குளிர்பானம் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே நேமம் கிராமத்தில் முன்னணி தனியார் குளிர்பான நிறுவனம் (ஹிந்துஸ்தான் கோகோ கோலா பெவரேஜஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக மாவட்டத்திற்கு உதவும் முயற்சியில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகிறது.
தற்போதைய நிலையில் இதன் ஒரு பகுதியாக தனியார் குளிர்பான நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிளாஸ்மாவை சேகரிக்கும் வகையில் ரத்த வங்கி குளிர்சாதன பெட்டியையும் வழங்கவும் முன்வந்தது. அதனடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பிளாஸ்மாவை சேமிக்கக்கூடிய ரத்த வங்கி குளிர்சாதன பெட்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம், அந்த தனியார் குளிர்பான தொழிற்சாலையின் தலைவர் ஸ்ரீதர், பொது மேலாளர் தாம்சன் ஆகியோரால் வழங்கப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக ஆட்சியர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுப்பாட்டில் 9 அரசு பொது மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு சொந்தமான மற்ற 2 ரத்த வங்கிகள் மூலம் உள் நோயாளிகளின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த காலங்களில் பிளாஸ்மாவை சேமித்து வைக்க கூடிய நவீன ரத்த வங்கி குளிர்சாதன பெட்டி இல்லாத நிலையிருந்தது. கரோனா நேரத்தில் அதிகளவில் பிளாஸ்மா தேவைப்பட்டது. இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதியில்லாததால் பிளாஸ்மாவை சேமித்து வைக்க முடியாத நிலையிருந்தது.
தற்போது இத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பிளாஸ்மாவை சேமித்து வைக்க கூடிய ரத்த குளிர்சாதன பெட்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரத்தத்திற்கு கூடுதலாக குளிர்சாதன பெட்டியில் 180 பைகள் பிளாஸ்மாவை சேமித்து வைப்பதோடு, நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் ராயல்ஸ் ரோட்டரி கிளப்பின் தலைவர் அபர்ணா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் அரசி ஸ்ரீவத்சன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.