திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற புறநகர் ரயில் மின்கம்பியில் மழையால் துருப்பிடித்ததன் காரணமாக இடையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அரைமணிநேரம் அவதிக்குள்ளாகினர்.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை வழக்கம் போல் காலையில் 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நோக்கி புறநகர் ரயில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. புட்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மின்சாரம் கிடைக்காத நிலையில் திடீரென புறநகர் ரயில் நின்றது. இதையடுத்து உடனே பணியாளர்கள் இறங்கி பார்க்கையில் மின்கம்பியில் மழையால் துருப்பிடித்திருந்த பகுதியில் திடீரென தீப்பொறியால் ஏற்பட்ட மின்தடையால் நின்றது தெரியவந்தது.
இது தொடர்பாக உடனே ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பணியாளர்கள் விரைந்து வந்து மின்கம்பியில் துருப்பிடித்திருந்ததை அகற்றினர். அதைத் தொடர்ந்து அரைமணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.