அம்பாசமுத்திரம்: கடையம் அருகே தோரணமலை முருகன் கோயில் நுழைவு வளைவு அருகே இருந்த முருகன் உருவச் சிலையை மது போதையில் உடைத்தவரை கடையம் போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடையம் அருகே பிரசித்திபெற்ற தோரணமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. கடையம் தென்காசி சாலையில் மாதாபுரம் செக்போஸ்ட் பகுதியில் இந்தக் கோவிலின் நுழைவு வளைவு அமைந்துள்ளது. இதனருகே ஒரு உண்டியலும், சிமென்டினாலான ஓரு முருகன் உருவச் சிலையும் உள்ளது. இந்த முருகன் சிலையை வியாழக்கிழமை இரவு மர்ம நபர் உடைத்துள்ளார்.
தோரணமலை முருகன் கோயில்
இது குறித்துத் தகவலறிந்த கடையம் காவல் உதவி ஆய்வாளர் ஜெயராஜ் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்ததில் அதே பகுதியைச் சேர்ந்த ராமையா மகன் சிவக்குமார் என்பவர் வியாழக்கிழமை இரவில் மது போதையில் சாலையில் போலீஸார் வைத்திருந்த வேகத் தடுப்புகளைச் சாய்த்தும், முருகன் உருவச் சிலையை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடையம் போலீஸார் சிவக்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.