வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரை வாழப்பாடி வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக ஒரு கும்பல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தி செல்வதாக, சேலம் மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனைடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரு யானை தந்தங்களை 5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து, இரு யானைத் தந்தங்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், யானை தந்தங்களை கடத்தல் கும்பலைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விளக்கூர் சசிகுமார் (22), சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன்குட்டை சேட்டு (41). ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்( 24),சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தங்கமாபுரிபட்டணம் பரத் (23). மேட்டூர் வீரக்கல்புதூர் பிரவீன்குமார் (24). ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.