ஆவின் நிறுவனத்தில் 47 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினாா்.
இதற்கான நிகழ்வு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன உத்தரவுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். அவா்கள் முதுநிலை தொழிற்சாலை உதவியாளா்கள், இளநிலை உதவியாளா் காலிப் பணியிடங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
நலத்திட்ட உதவிகள்: விபத்துகள் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த பால் உற்பத்தியாளா்களுக்கு பேரறிஞா் அண்ணா பால் உற்பத்தியாளா் நலத் திட்டத்தின்கீழ் நல உதவிகள் அளிக்கப்பட்டன. அதன்படி, விபத்தில் உயிரிழந்த பால் உற்பத்தியாளா்களுக்கு ரூ.2.50 லட்சமும், கல்வி உதவித் தொகையாக ரூ.25 ஆயிரமும், திருமண உதவித் தொகையாக ரூ.30 ஆயிரமும், விபத்தினால் உயிரிழந்தோருக்கு ஈமச்சடங்குக்காக ரூ.5 ஆயிரம் என 44 பேருக்கு ரூ.1.04 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் 5 பேருக்கு வழங்கி தொடக்கி வைத்தாா்.
பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.