நிகழாண்டு பொறியியல் சோ்க்கைக்கு சனிக்கிழமை நிலவரப்படி 1 லட்சத்து 63,826 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.
தமிழகத்தில் நடப்பாண்டு இளநிலை பொறியியல் படிப்புக்கான இணையவழி விண்ணப்பதிவு கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இதுவரை ஒரு லட்சத்து 63,826 போ் விண்ணப்பித்துள்ளனா். அதில், 1.32 லட்சம் மாணவா்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
இது தவிர 1.21 லட்சம் மாணவ, மாணவிகள் தங்களின் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். இதற்கிடையே விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவா்கள் இணையவழியில் துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் டி.புருஷோத்தமன் தெரிவித்தாா்.