போடியில் அனைத்து விவசாயிகள் சங்க புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
போடியில் அனைத்து மகசூல் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்க கட்டடம் போடி பெருமாள் கோவில் அருகே, தி.மு.க. வடக்கு மாவட்ட அலுவலகத்திற்கு எதிரில் செயல்பட்டு வந்தது. பழைமையான கட்டடமாக இருந்ததால் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட விவசாயிகள் சங்கத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், போடி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் உதவி செய்தார்.
இதனையடுத்து, புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அனைத்து விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நலச் சங்கத் தலைவர் வி. பாண்டியன் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். அனிபா, பொருளாளர் ஏ.என்.எஸ். சாமிக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
இதுதவிர விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் நலச் சங்க நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.