தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே புலிக்கரடு அடிவாரத்தில் பாயும் வரட்டாற்றில் பாலம் கட்ட தமிழக அரசு 2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் பொதுமக்களின் 40 ஆண்டு கோரிக்கை நிறைவேறுகிறது என்று ஜங்கமசமுத்திரம் ஊராட்சித்தலைவர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தம்மம்பட்டி அருகே உள்ளது ஜங்கமசமுத்திரம் ஊராட்சி. கொல்லிமலை அடிவார ஊராட்சியாக உள்ளது. கொல்லிமலை சாரலில் இருந்து உற்பத்தியாகும் வரட்டாறு, புலிக்கரடு வழியாக பாய்ந்தோடி தம்மம்பட்டியிலுள்ள சுவேத நதியில் கலக்கிறது. புலிக்கரடு சாலை வழியாக கொல்லிமலையின் அனைத்து ஊர்களிலிருந்து மலைவாழ்மக்கள் தங்கள் விளைபொருள்களை தம்மம்பட்டிக்கு கொண்டுவருவது வழக்கம்.
பள்ளி மாணவ, மாணவிகள் இந்த வழியேதான் தம்மம்பட்டி பகுதிகளுக்கு தங்களது உயர்கல்வி பயில வந்துச் செல்லவேண்டும். ஆனால் மழைக்காலங்களில், இந்த வரட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது, மலைவாழ்மக்கள், இவ்வழியே தங்கள் விளைபொருள்களை எடுத்துச்செல்ல இயலாமல், சுமார் 10 கி.மீ.தூரம் சுற்றி செல்ல வேண்டும்.
அதில் பள்ளி மாணவ, மாணவிகளும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். அதனையடுத்து வரட்டாற்றில் பாலம் கட்டக்கோரி கடந்த 40 ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள், முதியோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதுபற்றி ஜங்கமசமுத்திரம் ஊராட்சித் தலைவர் அ.பெரியசாமி கூறியதாவது, இப்பகுதி மக்களின் 40 ஆண்டுக் கோரிக்கையையடுத்து, புலிக்கரடு அடிவாரம், வரட்டாற்றில் பாலம் கட்ட தமிழக அரசு நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதற்காக, உயர்அதிகாரிகள் பாலம் கட்டுவதற்கான வரைவு திட்டம் தயாரித்தல், நேரில் ஆய்வு செய்தல் போன்ற பணிகளை செய்யத்தொடங்கியுள்ளனர் என்றார்.