வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 112 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு இன்று (ஆக.29) தேர்வு செய்யப்பட்டனர்.
ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு நிலைப்பள்ளியில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமுக்கு பள்ளியின் தலைமையாசிரியரும், அரிமா சங்கத் தலைவருமான கா.பழநியப்பன் தலைமை வகித்தார்.
மன்னார்குடி ஏ.லெட்சுமணத் தேவர் நினைவாக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, அரிமா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முகாமை அரிமா சங்க மாவட்டத் தலைவர் எல்.என். இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
அரிமா சங்கத்தின் நிர்வாகிகள் ஏ.வி.எஸ்.சம்பத், விஜயகுமார், பார்த்தசாரதி, செந்தில்குமார், ஊராட்சித் தலைவர் இராமையன், வட்டாரக் கல்வி அலுவலர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் 458 பேர் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டதில், கண் அறுவை சிகிச்சை செய்ய 112 பேர் தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.