அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜோதிபுரத்தையடுத்துள்ள ஸ்ரீசீரடி சாய்பாபா கோவிலில் திங்கள்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடும்,உலக நன்மை வேண்டி தியானமும் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை ஜோதிபுரம் அருகே அருள்மிகு சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. தமிழக அரசின் தற்போதைய ஊரடங்கு விதிமுறைகளின்படி திங்கள்கிழமை கோவிலின் வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆவணி மாத திங்கள்கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு இன்று நன்பகலில் சிறப்பு உச்சிகால வழிபாடு நடைபெற்றது. அப்போது, அருள்மிகு சத்தியநாராயணர் மற்றும் ஸ்ரீகிருஷ்ண பகவானின் திரு உருவப்படங்களுக்கு சிறப்பு மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்வித்து தீப, தூப ஆராதனைகள் செய்யப்பட்டன.
அதையடுத்து, ஸ்ரீசீரடிசாய்பாபாவிற்கான சிறப்பு வழிபாட்டுப்பாடல்களுடன், முன்னதாகவே சிறப்பு மலரலங்காரம் செய்யப்பட்ட பாபாவிற்கு பக்திப்பாடலுக்கேற்றபடி பஞ்சதீப, ஏக தீப ஆராதனைகள் செய்யப்பட்டன.
பின்னர் கோவில் ஊழியர்கள் ஸ்ரீசீரடி சாய்பாபாவிற்கு வெண்சாமரம் வீசியபடி இருக்க, சிறப்பு பிரசாத அர்ப்பணிப்பாகிய நைவேத்திய நிகழ்ச்சி நடைபெற்றது. வழிபாடு முடிந்ததும், முழு அலங்காரத்தில் ஸ்ரீசீரடி சாய்பாபா அருள்பாலித்தார்.
அப்போது, இவ்வழிபாட்டின் நிறைவு நிகழ்ச்சியாக, கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டு 3 நிமிட மெளன தியானத்தில் ஈடுபட்டு, உலக நன்மை வேண்டி சிறப்பு சங்கல்ப வழிபாடும் நடைபெற்றது.