மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் தஞ்சாக்கூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் வளாகத்தில் யாகசாலை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்களை வைத்து கடந்த புதன்கிழமை யாக வேள்வி தொடங்கியது. இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்று பூர்ணாகஹூதி நிறைவடைந்து மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதையும் படிக்க.. தேஜஸ் விமான விபத்தை தவிர்த்ததற்காக விருது பெற்றவர் வருண் சிங்
குலால சிவாச்சாரியார்கள் புனிதநீர் குடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனர். அதன்பின்னர் வானத்தில் கருடன் வட்டமிட மூலவர் ஜெயா பெருமாள் விமான கலசத்திற்கும் பெருமாளின் 10 அவதாரங்களுக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமானோர் குடமுழுக்கு விழாவை கண்டு தரிசனம் செய்தனர். பாஜக முன்னாள் தேசிய செயலர் எச். ராஜா, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், தமிழரசி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் கோவிலில் நடந்த அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். கோயில் நிர்வாகியான சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியன் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.