ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
இந்த விபத்து குறித்து கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு விதமான கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையில், முப்படைகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் உண்மை நிலை அறியாமல் தேவையில்லாத யூகங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம். விரைவில் விசாரணை முடிந்து உண்மையான காரணம் வெளியிடப்படும் என இந்திய விமானப்படை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை தரப்பில், விமான விபத்து குறித்து பொய்யான கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.