கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளத்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும் மீட்புப்பணிகள் துரிதமாக செயல்பட்டதாலும் தற்போது மழை குறைந்துள்ளதாலும் நிலைமை சீராகியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று வெங்கடேஸ்வரா நகர், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சபாபதி தெருவில் இரண்டு மாடி குடியிருப்பு வீட்டின் முதல் தளம் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி உதவித்தொகையை வழங்கினார்,
வள்ளியம்மை தெருவில் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், அப்பகுதியில் உள்ள கழிவுநீர் தொடர்பான பிரச்சனையை சீர்செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையினை துரிதமாக களைவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் பொதுமக்களை சந்தித்து, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையைப் பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரிலுள்ள ஸ்கை மஹால், லஷ்மணன் நகர், அக்பர் சதுக்கம் மற்றும் ஜெயராம் நகர் 1-வது பிரதான சாலை ஆகிய இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விஜயராஜ்குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | பள்ளிக்கரணையில் சதுப்புநில சூழலியல் பூங்கா திறப்பு