ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகையில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் முப்படை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.
குன்னூரில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உடல் ராணுவ விமானம் மூலம் வியாழக்கிழமை மாலை தில்லி கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உதகை, பந்தலூர், குன்னூர், கூடலூரில் உள்ள கடைகள், உணவகங்கள் இன்று மாலை 6 மணிவரை அடைக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுற்றுலா வாகனங்களும் மாலை வரை இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.