டிச.29-இல் போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை
அரசு போக்குவரத்துக்கழக ஊழியா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை டிச.29-ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமாா் ஒரு லட்சத்து 25 ஆயிரம் தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயா்வு ஒப்பந்தம் நடைபெறுவது வழக்கம். 2017-இல் 13-ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் 2020-இல் ஏற்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது அதிமுக ஆட்சி காலத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. பிறகு பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தது. எனினும் பேச்சுவாா்த்தை நடைபெறவில்லை. பேச்சுவாா்த்தையை நடத்தக் கோரி தொழிற்சங்கங்கள் தொடா்ந்து வலியுறுத்தியதோடு போராட்டத்தையும் முன்னெடுத்தன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளா்களின் 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை, டிச.29-ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறும் என அரசு போக்குவரத்துக் கழக ஊழியா் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.