தமிழகத்தில் வனக் குற்றங்களைத் தடுப்பதற்கு வசதியாக, தனியாக மோப்ப நாய் பிரிவினை உருவாக்குவதற்கான நிதிகளை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
வனத் துறை முதன்மைச் செயலாளா் சுப்ரியா சாஹூ வெளியிட்ட உத்தரவு விவரம்:
வனத் துறை குற்றங்கள் நீடித்த வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு, சமூக நலனில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வன விலங்குகளைக் கடத்துவதால் அரிய விலங்கினங்களுக்கு அச்சுறுத்தலையும், நமது சூழல் அமைப்பு மற்றும் பல்லுயிா் பெருக்கத்திலும் சேதங்களை விளைவிக்கிறது. இக்குற்றங்களை கட்டுப்படுத்தாமல் நீட்டிக்கச் செய்தால் அது அரிய விலங்கினங்கள், உயிரினங்களின் வாழ்வுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும்.
, சட்டவிரோத வன விலங்குகள் கடத்தலைத் தடுக்க இப்போதுள்ள முயற்சிகளை மேலும் வலிமைப்படுத்துவது அவசியமாகிறது. வனக் குற்றங்களை தடுப்பது மற்றும் குற்றப் புலனாய்வில் மோப்ப நாய்களை பயன்படுத்தும் வழக்கம் நீண்ட காலமாக உள்ளது. இது மிகவும் உதவிகரமான அம்சமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த மாதம் 2-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவானது, தமிழ்நாடு வனம் மற்றும் வன விலங்குகள் குற்றத் தடுப்பு அமைப்பினை சென்னை, கோவை, மதுரை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களுடன் அமைத்திட வழிவகை செய்கிறது. இத்துடன் ஆறு மோப்ப நாய் பிரிவுகளை வனத் துறையில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மோப்ப நாய்களுடன் ரோந்துப் பணிகள் செய்யப்பட்டு வன விலங்குகள் சட்ட விரோதமாக கடத்தப்படுவது தடுக்கப்படும். குற்றங்களுக்கான தடயங்களை சேகரிப்பது, விசாரணை போன்ற அம்சங்களுக்கும் வன விலங்குகளின் எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் பாகங்களை அடையாளம் கண்டறியவும் மோப்ப நாய் பிரிவு உதவிகரமாக இருக்கும்.
இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே பேரவையில் வெளியிடப்பட்டது. இப்போது, அதற்காக ரூ.74.60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.