புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு அரசு விதிக்கப்படும் வரியை குறைக்கக்கோரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த நடிகர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் அதிக அளவில் சினிமா படப்பிடிப்பு நடந்து வந்தது. சினிமா படப்பிடிப்பு நடத்த அரசு வரி விதித்து வருகின்றது. மற்ற மாநிலங்களை விட படப்பிடிப்பு வரியானது குறைவாக இருந்தபோதிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு வரியை உயர்த்தியது.
இதனை புதுச்சேரி அரசு குறைக்கவேண்டும் என நடிகர்கள் பார்த்தீபன், பிரசாந்த் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் ஏற்கனவே கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், கின்னஸ் சாதனைக்காக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்கப்பட உள்ள குறும்படத்தில் நடிப்பதற்கு இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் புதுச்சேரிக்கு வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அவர் நடிகர்கள் சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது வீட்டில் நேரில் சந்தித்தார். அப்போது சினிமா படப்பிடிப்புக்கு அரசு சார்பில் விதிக்கப்படும் வரியை குறைக்கக்கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்கு விதிக்கப்படும் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.