நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இடைவேளையின்போது மாணவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றபோது, கழிப்பறை கட்டடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளனர். இதுகுறித்து தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும். கட்டட விபத்து தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விபத்துக்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மை பற்றி உடனடியாக ஆய்வு நடத்தப்படும் என்றார்.