போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள் இன்றி அரசாங்கமே இல்லை. நீங்கள் அரசு ஊழியர்; நான் மக்களின் ஊழியன்; உங்களுக்கும், எனக்கும் இது தான் வித்தியாசம்.
அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகைகளை வழங்கியது திமுக அரசுதான். அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை நிதி வழங்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. நான் அதிகம் பேசமாட்டேன்; செயலில் காட்டுவேன்.
இதையும் படிக்க- யு-19 உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
செய்து முடித்துவிட்டுதான் சாக வேண்டும் என்ற எண்ணத்திலேயே கடமையாற்றி வருகிறேன். அரசு பணிகளில் சேர வயது வரம்பை உயர்த்தியது திமுக அரசுதான். ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடியிலும் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும். மழை வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டிய மத்திய அரசு இன்னும் தரவில்லை.
ஜிஎஸ்டி வரியிலும் தமிழகத்திற்கான தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. கொத்தடிமை போலத்தான் மத்திய அரசிடமிருந்து மாநிலங்கள் நிதியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.