தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:
கடந்த வெள்ளிக்கிழமை இரவு உருவான இந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி கிழக்கு- வடகிழக்கு திசையில் நகரவுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையவுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில், மீனவா்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பூமத்திய ரேகை பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் அடுத்த இரு நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.