மதுரை: மதுரையில் 110 பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். மற்றொரு காவலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர்களான சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் இரவு நேர ரோந்து பணியில் இருந்துள்ளனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் கீழவெளி வீதியில் உள்ள கடை முன்பாக நடமாடும் தேநீர் கடையின் மூலமாக தேநீர் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.
திடிரென இடிந்து விழுந்த 110 ஆண்டுகள் பழமையான கட்டடம்
அதனால் அந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், கூட்டத்தை கலைந்து செல்லுமாறு கூறிய காவலர்கள் அதே பகுதியில் நின்றுகொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த முகம்மது இத்ரீஸ் என்பவருக்கு சொந்தமான 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் திடிரென இடிந்து விழுந்தது.
இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காவலர் சரவணன் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மற்றொரு காவலரான கண்ணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த விளக்குத்தூண் காவல்துறையினர் கட்டட உரிமையாளரான இத்ரிஸ் மற்றும் வாடகைதாரர் உள்பட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கீழவெளி வீதியில் இடிந்து விழுந்த 110 ஆண்டுகள் பழமையான கட்டடம்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் காவலர் உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஜன.8 முதல் மதுரை- ஷாா்ஜா இடையே விமான சேவை