தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச.29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச.29) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
டிச.30: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பா் 30-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
டிச.31, ஜன.1:தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் டிசம்பா் 31, ஜனவரி 1-ஆம் தேதி ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மூடுபனி : மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஏனைய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச.29) லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னையில்..: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.