தமிழகத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், பாலங்களைச் சீரமைப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.ஆா். பெரியகருப்பன் உள்ளிட்டோரும், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனா்.
கடும் மழை வெள்ளம் காரணமாக, மாநிலத்தில் பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 52 சாலைகள் அளவுக்கு அதிகமாக சேதத்தைக் கண்டுள்ளன. அந்தச் சாலைகள் அனைத்தும் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள சாலைகளையும் ஓரிரு நாள்களில் சீரமைக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்தச் சாலைகளையும் உடனடியாக சீரமைக்க வேண்டுமென அதிகாரிகளை முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.