‘தினமணி’ நாளிதழுக்குத் தமிழக அரசின் தமிழா் தந்தை சி.பா. ஆதித்தனாா் நாளிதழ் விருதினை இன்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
விருதை முதல்வரிடமிருந்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதுநிலைப் பொது மேலாளர் சித்தார்த் சொந்தாலியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதையும் படிக்கலாமே.. திருவள்ளுவா் திருநாள்-சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்: முதல்வா் வழங்கினாா்
நிகழ்வின்போது செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் சி. ராஜு, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், முதுநிலைத் துணைத் தலைவர் (விளம்பரப் பிரிவு) ஜே. விக்னேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னையில் தலைமைச் செயலகத்திலுள்ள முதல்வரின் கூட்டரங்கில், நடைபெற்ற விழாவில் விருதினை வழங்கினார் முதல்வா் பழனிசாமி.
தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ் மற்றும் திங்களிதழ் ஒவ்வொன்றிலும் சிறந்த ஒவ்வொன்றுக்கு ஆண்டுதோறும் தமிழா் தந்தை சி.பா.ஆதித்தனாா் பெயரில், தமிழக அரசு விருது வழங்கிவருகிறது.
இந்த ஆண்டு சிறந்த நாளிதழுக்கான விருதினைப் பெற்றுள்ளது தினமணி நாளிதழ். விருதுத் தொகையாக ரூ.1 லட்சம், கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.