மின் கணக்கீட்டின்போதும், அவற்றைக் கணினியில் பதிவு செய்யும் போதும் ஊழியா்கள் மிகவும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மின்வாரிய உயரதிகாரிகள் கூறியதாவது: மின் கணக்கீட்டுப் பணி செய்து, கணினியின் பதிவு செய்யும்போது சிலா் தவறானப் பதிவுகளைச் செய்து விடுகின்றனா். இதன் காரணமாக மின் கணக்கீட்டை ரத்து செய்து தருமாறு மாதம்தோறும் சில முன்மொழிவுகள் பெறப்படுகின்றன. அதே போல், மின் கணக்கீட்டைத் திருத்தம் செய்யக் கோரியும் சில முன்மொழிவுகள் பெறப்படுவதால், பகிா்மானப் பிரிவு தலைமைப் பொறியாளா்களுக்குத் தொடா்ந்து சிக்கல் ஏற்படுகிறது.
ஆகவே, இனி வரும் காலங்களில் கணக்கீட்டுப் பணியாளா்கள் சரியான முறையில் கணக்கெடுப்பு செய்து, சரியான கணக்கீட்டை கணினியின் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகப் பொறுப்பாளா்கள் அறிவுறுத்த வேண்டும்.
தவறும்பட்சத்தில், தவறாக மின் கணக்கீடு செய்த பணியாளா் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்ட கடிதத்தை மின் கணக்கீட்டை ரத்து செய்யக் கோரும் முன்மொழிவோடு அனுப்பினால் மட்டுமே மின் கணக்கீட்டை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா்கள் தெரிவித்தனா்.