திருச்சியில் காவலாளியைத் தாக்கி கோயிலில் துணிகரக் கொள்ளை

திருச்சியில் காவலாளியைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.
திருச்சியில் காவலாளியைத் தாக்கி கோயிலில் துணிகரக் கொள்ளை
திருச்சியில் காவலாளியைத் தாக்கி கோயிலில் துணிகரக் கொள்ளை

திருச்சி: திருச்சியில் காவலாளியைத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 2 மர்ம நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.

திருச்சி - புதுக்கோட்டை சாலையில் விமானநிலையம் அருகேயுள்ள அண்ணா கோளரங்கம் எதிரில் பச்சநாச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், கொட்டப்பட்டு இந்திராநகரைச் சேர்ந்த ராஜரத்தினம் (63), என்பவர் இரவுக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு கோயிலில் பூஜைகள் முடிந்து பூசாரி மற்றும் நிர்வாகிகள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். காவலுக்கு ராஜரத்தினம் இருந்தார். 

புதன்கிழமை அதிகாலை கோயிலுக்குள் நுழைந்த 2 மர்ம நபர்கள் காவலாளியை தாக்கியுள்ளனர். இதல், தலையில் ரத்தகாயமடைந்த அவர், மயங்கி விழுந்தார். இதையடுத்து கோயிலுக்குள் சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் காசுகள், உண்டியலில் காணிக்கையாக இருந்த நகை, பணம் மற்றும் காவலாளி வசம் இருந்த ரூ.4,500 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். 

மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்த ராஜரத்தினம், கொள்ளை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த விமான நிலைய காவல்நிலைய காவலர்கள், மோப்ப நாய் உதவியுடன் கோயிலில் சோதனை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்து எடுத்தனர். 

மோப்ப நாயானது, பிரதான சாலை வரை சென்றுவிட்டு மீண்டும் கோயிலுக்கு திரும்பிவிட்டது.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com