சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 1,567 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் கரோனா பாதிப்பு விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இதுவரை 2,32,168 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 4,114 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டோரில் 2,26,487 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 1,567 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் கரோனா சிகிச்சை பெற்று வருவோர், குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோர் விவரங்களையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.