கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் அனைத்து வகையான கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து நாளை (பிப்.8) முதல் பொறியியல், கலை அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளின் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் மீண்டும் தொடங்க உள்ளன.
முகக்கவசங்களை அணிவது, தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுவது கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவது உள்ளிட்டவற்றைப் பின்பற்றி வகுப்புகளை நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.