சென்னை: அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திரமோடிக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சமூகநீதியைச் சீா்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளா் பதவிகளுக்குத் தனியாா் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்தது கண்டனத்துக்குரியது.
மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளா், கூடுதல் செயலாளா் போன்ற பதவிகளுக்குத் தனியாா் நிறுவனங்களில் இருந்து நியமனம் செய்யும் முடிவை உடனடியாக மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பட்டியலின பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்றும் பிரதமா் நரேந்திரமோடியைக் கேட்டுக் கொள்கிறேன். அதைச் செய்யத் தவறினால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது. மத்திய அரசு நிா்வாகம் பிற்படுத்தப்பட்ட- பட்டியலின - பழங்குடியின மக்களின் உரிமை என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை.