சென்னையில் அமைச்சர் வேலுமணியை சந்தித்த விசைத்தறி சங்க நிர்வாகிகள்

வங்கிகளில் விசைத்தறியாளர்கள் வாங்கிய கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்துப் பேசினர்.
சென்னையில் அமைச்சர் வேலுமணியை சந்தித்த விசைத்தறி சங்க நிர்வாகிகள்

வங்கிகளில் விசைத்தறியாளர்கள் வாங்கிய கடன் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டி சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

சென்னையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பல்லடம் வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், கண்ணம்பாளையம் சங்க செயலாளர் செந்தில்குமார்,கோவை பழனிசாமி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். 

அதில் கூறியிருப்பதாவது.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் 30,000 விசைத்தறி கூடங்களில் இயங்கி வருகிறது. இதன்முலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 லட்சம் ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். பெரும்பான்மையான விசைத்தறிகள் கூலிக்கு நெசவு அடிப்படையில் இயங்கி வருகிறது. கடந்த 1992 முதல் ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் அரசு ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து கூலி உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு பெற்றுத்தருவது வழக்கம். ஆனால் கடந்த 2014க்கு பின் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு, கரோனா நோய் பாதிப்பு ஆகியவற்றால் தொழில் பாதிக்கப்பட்டு பல லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. 

2014 ஆம் ஆண்டுக்கு பின்பு கூலி உயர்வு அறிவிக்கப்பட்டு அது நடைமுறைப்படுத்தப்படாததால் விசைத்தறிகளுக்காக வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாமல் விசைத்தறியாளர்கள் வங்கிகளின் ஜப்தி, ஏல நடவடிக்கைகளுக்கு வீடு, விசைத்தறி கூடங்களை இழக்கும் நிலையில் உள்ளனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூலூர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தபடி விசைத்தறியாளர்கள் பெற்ற வங்கி மூலதன கடன்கள் ரூ.65 கோடியை தள்ளுபடி செய்து விசைத்தறியாளர்கள் மற்றும் அதை நம்பியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர். இது பற்றி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்துள்ளார். உடுமலையில் 11ம் தேதி வியாழக்கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதே கோரிக்கை குறித்து பேசவுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com