வரதட்சிணை கேட்டுக் கொடுமைப்படுத்தி திருமணமான 4 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய தூண்டிய கணவன், மாமியருக்கு தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த யோகராஜிக்கும், கும்பகோணத்தைச் சேர்ந்த மனோன்மணி என்பவருக்கும் கடந்த 2014-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் சென்னையில் வசித்து வந்தனர். இந்த நிலையில் வரதட்சணை கேட்டு யோகராஜ் மற்றும் அவரது தாயார் பானுமதி ஆகியோர் மனோன்மணியை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனால் மனோன்மணி, திருமணமான 4 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான புகாரின் பேரில் யோகராஜ், பானுமதி மீது தேனாம்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர் ஸ்ரீலேகா ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, யோகராஜ் மற்றும் அவரது தாய் பானுமதி வரதட்சணை கேட்டு மனோன்மணியைக் கொடுமைப்படுத்தியது, தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.