சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
பட்டாசு ஆலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காததும், இதற்கு பொறுப்பாக உள்ள அரசுத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதுமே இப்படிப்பட்ட இழப்புகளை தொடர்ந்து சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு நடைமுறைகளை உறுதி செய்திட வேண்டும்.
நடைபெற்ற வெடிவிபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடவும்,. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமெனவும், படுகாயமுற்று உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.
பட்டாசு தயாரிப்பு ஆலைகளில் அரசின் விதிமுறைகளை கறாராக அமல்படுத்துவதற்கும், வெடிவிபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்கும் தமிழக அரசு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அரசின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீதும், கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.