பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்காமல் இழக்கச் செய்த நடுவச்சேரி கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து விவசாயிகள் வெள்ளிக்கிழமை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்திற்கு உள்பட்ட K.840 நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெற்ற விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுதும் தள்ளுபடி செய்ய வேண்டும். டிசம்பர் மாதம் செலுத்திய பயிர்க் கடனை 2 மாதம் காலதாமதம் செய்து, உரிய நேரத்தில் பயிர்க்கடனை வழங்காமல் இழுத்தடித்து, பயிர்க் கடன் தள்ளுபடிக்கு விவசாயிகளைத் தகுதி இழக்கச் செய்த கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கியின் தலைவர், துணை தலைவர், இயக்குனர் குழு, சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை. ஆகவே இக்குழுவைக் கலைத்து மறு தேர்தல் மூலம் தலைவர், துணைத் தலைவர் மற்றும் இயக்குனர்களை தேர்வு செய்ய வேண்டும். சங்க தலைவர், இயக்குனர்களை உள்ளடக்கிய நிர்வாக குழு உரியக் காலகட்டத்தில் துணை செயலாளர், சங்கத்திற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்கவில்லை.
மேலும் கூட்டுறவு சங்க செயலாளர் விடுப்பில் சென்ற விடுப்பு கடிதத்தைத் தாமதமாக சமர்ப்பித்து, தற்காலிக செயலாளர் நியமனத்தைத் தாமதம் ஏற்படுத்தி, அரசின் சிறப்பு அறிவிப்பான பயிர்க்கடன் தள்ளுபடியை விவசாயிகள் பெறமுடியாமல் விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்குடன் செயல்பட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத கூட்டுறவு கடன் சங்க நிர்வாகத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். புதிதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்மையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் ஒரு நிர்வாகத்தை அமைக்க வேண்டும்.
தமிழக அரசின் விவசாயிகளின், பயிர்க்கடன் தள்ளுபடியை விவசாயிகளுக்குக் கிடைக்காமல் அரசிற்கு நற்பெயரைக் களங்கப்படுத்தும் விதமாக நடந்துகொண்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டுறவுச் சங்க வளாகம் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தின் அறிவிப்பை அடுத்து காவல்துறையினர் கூட்டுறவு கடன் சங்கம் முன் வெள்ளிக்கிழமை காலை முதலே குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் கூட்டுறவுச் சங்க வளாகத்திற்குள் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள அனுமதிக்கப்படாமல் கூட்டுறவு சங்கம் பூட்டப்பட்டதால், கூட்டுறவுச் சங்கம் அருகில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.