வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே வெள்ளிக்கிழமை வேலிக்கு வைத்த தீயில் வைக்கோல் போர் எரிந்து நாசமானது.
முத்தூர் - காங்கயம் சாலையிலுள்ள மேட்டாங்காட்டுவலசைச் சேர்ந்த விவசாயி தனபால் என்பவர் நெல் பயிரிட்டிருந்தார். அறுவடை முடிந்து வைக்கோல்களைக் கட்டி மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்துவதற்காக தனது பாலக்காட்டுத் தோட்டத்தில் போர் போட்டு வைத்திருந்தார். அருகில் சோளத் தட்டுப் போரும் இருந்தது.
போருக்கு சற்றுத் தொலைவில் இருந்த விவசாய வேலியைச் சுத்தம் செய்து தீ வைத்தனர். அப்போது காற்றில் தீ கங்குகள் பரவி வைக்கோல் போரில் தீப்பிடித்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலையப் போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
அதற்குள் வைக்கோல் போரின் பெரும் பகுதி, சோளத் தட்டுப் போரின் சில பகுதிகள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்குமென கூறப்பட்டது.