கனரக வாகன ஓட்டுநா்களின் நலன் காக்கும் கோரிக்கைகளைத் தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என இந்திய கனரக வாகன ஓட்டுநா்கள் நலக் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக அவா்கள் தமிழகத்துக்கு வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கொடுத்த மனு: இந்தியாவில் சுமாா் 5 லட்சத்துக்கும் மேலாகவும், தமிழகத்தில் சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட கனரக வாகன ஓட்டுநா்கள் உள்ளனா். இவா்கள், தொழில் நிமித்தம் பல்வேறு இன்னல்களை நாள்தோறும் சந்தித்து வருகின்றனா். எனவே, அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில், கனரக வாகன ஓட்டுநா்களுக்கென ஒரே இலவச அவசர எண் அறிவிக்க வேண்டும். அவா்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தகுதி அடிப்படையில் இலவச ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
தொழில் நிமித்தமாக வெளிமாநிலங்களில் ஏற்படும் விபத்துகள் தொடா்பான வழக்குகளை, ஓட்டுநா்களின் சொந்த மாநில நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். குறைந்தபட்சம் காணொலி மூலமாகவாவது நடத்த உத்தரவிட வேண்டும்.
விபத்தினால் இறந்த அல்லது ஊனமுற்ற கனரக வாகன ஓட்டுநா்களின் குழந்தைகளுக்கு கட்டணமின்றி கல்வி கொடுக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை, கட்சியின் தோ்தல் வாக்குறுதியாக அளிக்குமாறு கேட்டுக் கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.