பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் 2ஆவது நாளாகக் காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார்.
இதில், பங்கேற்ற அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக்குவேன் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தர வேண்டும் என்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையில் சமையல் செய்து உணவு அருந்தினர். இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.