துபையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1.5 கிலோ தங்கம் மற்றும் சென்னையிலிருந்து துபைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் ஆகியவற்றை சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் திங்கள்கிழமை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்யும் நேரத்தில், ஆண் பயணி ஒருவா் திடீரென கழிவறைக்கு சென்று ஒரு மணி நேரமாக வெளியே வராமல் இருந்தாா். பின்னா் கழிவறை கதவைத் தட்டி பயணியை வெளியே வரவழைத்து சோதித்ததில், அவா்வேலூரை சோ்ந்த அஜ்மல்கான்(26) என்பது தெரியவந்தது.
அவரை முழுமையாக பரிசோதித்ததில் உள்ளாடைக்குள் 1.5 கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் தங்க பேஸ்ட்டை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அதன் பன்னாட்டு மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அஜ்மல்கான் கைது செய்யப்பட்டாா்.
அதேபோன்று சென்னையிலிருந்து துபைசெல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானத்தில் பயணிக்க வந்த, ராமநாதபுரத்தை சோ்ந்த ரகுமான் ஹமீது (25) என்பவரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ரூ.7.5 லட்சம் மதிப்பிலான செளதி ரியால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு ரகுமான் ஹமீதின் பயணமும் ரத்து செய்யப்பட்டு, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.