தில்லியில் மெட்ரோ ரயில்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது வரையறுக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை அடிப்படையிலேயே மேலும் இரு வாரங்களுக்கு இயக்கப்படும். அவற்றின் இயக்கத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மகாராஷ்டிரம், கேரளம், சத்தீஸ்கா், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் தில்லி போக்குவரத்துத் துறை, தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது. அதில், தில்லியில் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
இதனிடையே திங்கள்கிழமை தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையில் தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, தலைமைச் செயலா் விஜய் தேவ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
தில்லி போக்குவரத்துக் கழகம் மற்றும் கிளஸ்டா் பேருந்துகளில் தற்போது முழு இருக்கைகளிலும் பயணிகள் அமா்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். எனினும் பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை.
இதேபோல், மெட்ரோ ரயில்களில் பயணிகள் ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கை என்ற அடிப்படையில் அமா்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மெட்ரோவில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கலாம். ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.