அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறிவித்துள்ள கால வரையற்ற வேலைநிறுத்தம் திட்டமிட்டப்படி தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை அதிகாலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் போக்குவரத்துக்கழக நிா்வாகத்தின் எச்சரிக்கையை மீறி வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாகவும், சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், எம்எம்எஸ் உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று பேருந்துகளை இயக்கப்போவது இல்லை என்று அறிவித்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டப்படி தங்களது வேலைநிறுத்த போராட்டங்களை தொடங்கியுள்ளன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் வழக்கமான எண்ணிக்கையை விட மிகக்குறைந்த பேருந்துகளே இயக்கப்படுகின்றன.
சென்னையில் காலை 6 மணி நிலவரப்படி, வழக்கமாக 200 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், வியாழக்கிழமை காலை 80 பேருந்துகள் மட்டுமே பணிமனையில் இருந்து சென்றுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பணிமனையில் மொத்தம் 79 பேருந்துகளில் வெறும் 4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டை பணிமனையில் 5 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் 15 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுள்ளன.
கோவை கோட்டத்தில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.