திருச்சி: திருச்சி, திருவரங்கம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு விழாவில் 24 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் இலவச சைக்கிள்களை வழங்கினர்.
திருச்சி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி, திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினர்.
திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அடங்கும். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 24 ஆயிரத்து 587 மாணவர் மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ 9 கோடியே 68 லட்சம் ஆகும்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.