மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரைக்கு சனிக்கிழமை வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய சென்னையிலிந்து விமானம் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவு அங்கு தங்கியிருந்து காலையில் மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புறப்பட்டார்.
வழியில் மானாமதுரை பஸ் நிலையம் முன்பு அதிமுகவினர் திரண்டு அதிமுக மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் தலைமையில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றனர். கட்சியினர் வரிசையாக நின்று அவருக்கு சால்வைகள் வழங்கினர்.
மானாமதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.நாகராஜன் உள்ளிட்டோர்.
கட்சியினர் அனைவரிடமும் சால்வைகளை பெற்றுக்கொண்டு முதல்வர் பழனிசாமி பேசுகையில், சிவகங்கை மாவட்டம் விவசாயம் அதிகமாக நடைபெறும் பகுதியாகும். விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு விரைவில் காவேரி- குண்டாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும். பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 2500 வழங்கும் பணி வரும் 4 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக காதி கிராமத்தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.குணசேகரன், அதிமுக ஒன்றியச் செயலாளர் ஜெயபிரகாஷ், கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வரை வரவேற்க மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களிலிருந்து திரளான தொண்டர்கள் வந்திருந்தனர்.